காதலே தினம் !
11:06 PM | Author: நிம்முவாகிய நான்




தினமும் விழிக்கையில்
கூடவே விழிக்கிறது
உன் நினைவுகளும் !

கிளம்ப எத்தனித்து
குளிக்கிறேன்
நீராய் வழிகிறது
உன் நினைவுகள் !
வழக்கம்போல்
என்னைக்
குளிர்விக்கின்றது !

வெளியில் வருகிறேன்
என்
உடலெங்கும்
உன் முகம்
நீர்த்திவலைகளாய் !
துடைக்க மனமின்றி
என்னில் முளைத்த
உன்னைப்
பார்க்கிறேன்!

காலை உணவு
சட்டினியில்
அம்மாவின் சுவையும்
இட்லியில்
உந்தன் மென்மையும் !
சாப்பிட மனமின்றி
தட்டைப் பார்க்கிறேன் !
எனக்குள் நீ
பசித்திருப்பாயென
உண்கிறேன்!

செல்லும் வழியில்
கடந்த கூந்தலில்
மல்லிகை !
எங்கும்
பரப்புகிறது
உந்தன் வாசம் !
ஆழமாக சுவாசிக்கிறேன்
காற்றாய் நிறைகிறாய்
நெஞ்செங்கும் !

வந்த பேருந்தில்
வழிகிறது கூட்டம்
என்னுள்
எப்பொழுதும்
நிறைந்து வழியும்
உன்
நினைவுகளைப் போல !
இருந்தும் நுழைந்து
கொள்கிறேன்
தரிசனத்திற்குச்
செல்லும்
பக்தன் போல !

கல்லூரிக்குள் நுழைகிறேன்
வழியெங்கும்
உந்தன் வெட்கம் !
கொட்டிக்கிடக்கின்றன
குல்மொகர் மலர்கள்!
வீசும் காற்றில்
சிரிக்கும் பூச்செடிகள்
நீ வந்துவிட்டாயென
உணர்த்துகின்றன !


கருவறையாய்
என்
வகுப்பறை !
பயபக்தியுடன்
பார்க்கிறேன்
தேவி தரிசனம்
கோடி புண்ணியம் !
ஒரு பார்வையால்
இந்த பக்தனை
இரட்சிக்கிறாய் !


இடைவேளை!
ஏதோ கேட்கிறாய்
ஏதும் கேட்கவில்லை
இருந்தும்
தலையாட்டுகிறேன்
சிரிக்கிறாய்
பிறந்த சிசுவைப்போல!
காற்றில் பறந்த உன்
சிரிப்பை
பிடிக்க விழைகிறேன்
தட்டான் பிடிக்க
ஓடும்
சிறுவனைப்போல!

வெயில் சாயும் நேரம் !
கல்லூரி விடுகிறது
சொர்கத்தைச்
சுமந்து வருகிறேன்
உன் நிழல் என்மீது!
முத்தம்பெறத்
துடிக்கிறது
பட்டு ஒதுங்கும்
உன் தாவணி
அணைத்து விலக்குகிறாய் !

விடையளிக்கிறாய்
உயிர் பறிக்கும்
உன்
புன்னகையினூடே!
எமன்போல
கவர்ந்துசெல்கிறது
உன் வழிசெல்லும் பேருந்து!
முடிந்துபோனது
இன்றைய சொர்கநாள்!


இரவு
தடமெங்கும் இருள்
உன் கூந்தலைப்போல்
விரிந்து கிடக்கின்றது !
உன் எண்ணப்
படுக்கையில்
உன் நினைவுகளே
போர்வையாக
நினைவின்றிக்
கிடக்கிறேன் நான்!

புலன் விழிக்கிறது
நண்பன் சொல்கிறான்
நாளை காதலர் தினம்!
சிரிக்கிறேன்
காதலர்க்கு தினம்
இருக்கலாம்
காதலுக்கு ஏது தினம் ?
காதலே தினம் !
|
This entry was posted on 11:06 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: