உன்னில் நனைந்திடத்தான் பொழிகிறது மழை.
2:30 PM | Author: நிம்முவாகிய நான்
நீ பறித்து சூட
பூத்திருக்கிறது
என்னுள் காதல்!
*
குடை விட்டெறி!

உன்னில்
நனைந்திடத்தான் பொழிகிறது
மழை.

*
காய்வதேயில்லை!

நீ தந்த
முத்தங்களின் ஈரம்!

*
காதுகளுக்கு
உன் பேச்சிசை!
கண்களுக்கு
உன் பேரழகு!
நாசிக்கு
உன் சுகந்தம்!
தேகத்திற்கு
தொடுகை!
என்ன பாவம் செய்தது
உதடுகள் மட்டும்;
வா!முத்தமிட்டுப் போ!
*
நான் ஒரு பக்கம்
உன் உடைந்த
கண்ணாடி வளையல் துண்டுகள்
ஒரு பக்கம்!

சமனாகி விடுகிறது
காதல் துலாபாரம்!

யாருடையது முதல்முத்தம்?
2:28 PM | Author: நிம்முவாகிய நான்

எப்போதாவது
வந்தமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்;
உனக்காக காத்திருக்கையில்!

*

மேளத்தின் அதிர்வெட்டுகிறது
இதயம்;
தலைகுனிந்து கடந்த நீ
திரும்பி பார்த்து வெட்கி குனியும்
நொடிப் பொழுதில்!

*

பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிறது;
கனவில் உனைக் கண்ட
என் இரவு!

*

முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!

*

நீ வர தாமதமாகும்
ஒவ்வொரு நிமிடமும்
அனுபவிக்கத் தருகிறது:
பட்டாம்பூச்சி தொலைத்த
குழந்தையின் அவஸ்தையை!

*

உன் உதடும்
என் உதடும்
சங்கமிக்கும் பொழுதில்
யாருடையது முதல்முத்தம்?

*

நீ
நீருள் இறங்கினாய்;
அழகால் நிரம்பியது
குளம்!