உன்னில் நனைந்திடத்தான் பொழிகிறது மழை.
2:30 PM | Author: நிம்முவாகிய நான்
நீ பறித்து சூட
பூத்திருக்கிறது
என்னுள் காதல்!
*
குடை விட்டெறி!

உன்னில்
நனைந்திடத்தான் பொழிகிறது
மழை.

*
காய்வதேயில்லை!

நீ தந்த
முத்தங்களின் ஈரம்!

*
காதுகளுக்கு
உன் பேச்சிசை!
கண்களுக்கு
உன் பேரழகு!
நாசிக்கு
உன் சுகந்தம்!
தேகத்திற்கு
தொடுகை!
என்ன பாவம் செய்தது
உதடுகள் மட்டும்;
வா!முத்தமிட்டுப் போ!
*
நான் ஒரு பக்கம்
உன் உடைந்த
கண்ணாடி வளையல் துண்டுகள்
ஒரு பக்கம்!

சமனாகி விடுகிறது
காதல் துலாபாரம்!

யாருடையது முதல்முத்தம்?
2:28 PM | Author: நிம்முவாகிய நான்

எப்போதாவது
வந்தமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்;
உனக்காக காத்திருக்கையில்!

*

மேளத்தின் அதிர்வெட்டுகிறது
இதயம்;
தலைகுனிந்து கடந்த நீ
திரும்பி பார்த்து வெட்கி குனியும்
நொடிப் பொழுதில்!

*

பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிறது;
கனவில் உனைக் கண்ட
என் இரவு!

*

முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!

*

நீ வர தாமதமாகும்
ஒவ்வொரு நிமிடமும்
அனுபவிக்கத் தருகிறது:
பட்டாம்பூச்சி தொலைத்த
குழந்தையின் அவஸ்தையை!

*

உன் உதடும்
என் உதடும்
சங்கமிக்கும் பொழுதில்
யாருடையது முதல்முத்தம்?

*

நீ
நீருள் இறங்கினாய்;
அழகால் நிரம்பியது
குளம்!

ஆதாம்
ஏவாள் சுவைத்த
பாவக்கனி
காதல்!

*

துளிர் துயிலும்
மழைத்துளி பருகவரும்
சின்னஞ்சிறு சிட்டுக்குருவியாய்
என்னிருதயம்
உனைத் தேடி
வரும் அந்நாளில்
காத்திரு காதலோடு!

*

கசப்பு மருந்தருந்திய
குழந்தையின் முகமாய்
இதயம்;
உன்னை காணா நாட்களில்!

*

ஒரு நாள்
மழையோடு;
மற்றொருநாள்
மலரோடு;
இன்னொரு நாள்
இசையோடு என்று
ஒவ்வொரு சந்திப்பின் பிறகும்
ஒவ்வொன்றோடு திரும்புகின்றேன்;
பொத்தி வைக்க இடமில்லாமல் போகும் நாளில்
மொத்தமாக கடத்திச் செல்வேன் உன்னை!

*

உலர்ந்து வெளிறி
உடையும் நிலையிலிருக்கிறது
ரோஜா இதழ்கள்;
பனி கூட உதிராமல்
பத்திரமாய் இருக்கிறது
அதை நீ கை சேர்த்த கணம்!

*

குளித்து வரும்
உன்னில் வழியும்
நீர்த்துளிகள் நினைவூட்டுகின்றன;
மழை தூரிகை
சன்னல் கண்ணாடியில்
வரையும் ஓவியங்களை!

*

தேநீரில்
கரைந்திட காத்திருக்கும்
சர்க்கரைக் கட்டியென
உன்னுள் கலந்திட
படைக்கப்பட்டவள் நான்!

*

உன்
வளையல் சிணுங்கும் ஓசைகளையும்
கொலுசு கொஞ்சும் ஒலிகளையும்
பத்திரப்படுத்துகிறேன்
என் கவிதைகளுக்கான இசைக்குறிப்புகளாய்!

*

உன்னைப் போலவே
அழகாயிருக்கிறது
நம் காதலும்!

*

நீ உறைய – இதயம்
கொத்திக் கொத்தி
கூடு அமைக்கிறது
காதல் குருவி!

*

அதிகாலை எழுந்து
சோம்பல் முறிக்கிறாய்;
எங்கோ மெல்ல
மொட்டு வெடிக்கிறது
ஓர் தாமரை!

*

கோபமாய்
நீ முகம் திருப்பிடும்
கணத்தில்
சட்டென நிகழ்ந்தே விடுகிறது
என் வானில்
ஓர் சந்திர கிரகணம்!

*

பார்வையற்ற மனிதனின்
கைத்தடியாய்
நீ இல்லா என் வாழ்வில்
நின் நினைவுக்குறிப்புகள்!

*

எப்படி பத்திரப்படுத்துவதெனத் தெரியவில்லை
உன் இதழ்கள்
என் மேல் வரைந்த
ஈர ஓவியங்களை!

மணல் ஓவியங்கள் –
மண் மீது படியும்
உன் கால்தடங்கள்!

#

தள்ளி நின்றே
கும்பிடு!
இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
அடம்பிடிக்கப் போகிறான்
அய்யனார்!

#

நீ அமைதியாய்தான்
இருக்கிறாய்;
உன் அழகுதான்
புரிகிறது
ஆயிரம் அழிச்சாட்டம்!

#

இதழ் ஒற்றி எடுத்தாய்
கைக்குட்டையில்
முளைத்தது ரோஜா!

#

நாட்குறிப்பில் பூத்த
கவிதையை பறிக்க
உனை அழைத்தால் –
நீ வருகிறாய்
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!

உன் வெட்கத்தின்

மையால்

வரையப்படுகிறது

அந்தி!

*

உன் புன்னகைகளை

மதுக் கோப்பையில்

நிரப்பித் தந்தேன்

தள்ளாடியபடி இருக்கிறது

இதயம்!

*

காதல் மீனுக்கு

பொரி

நீ,நான்!!

*

விரலசைத்து

நீ பேசும்போது

காற்று

ஓர் வீணை!

*

உன்னோடு

நான் இருக்கையில்

உலகின் பரப்பளவு

சில சதுர அடிகள்!

*

நீ சிந்தும்

வெட்கத்தை

சேலையென

உடுத்திக் கொள்கின்றன

என் கவிதைகள்!

மெளனமாய் நாம்
கண்கலந்திருந்தபோது
நம்
நிழல்கள் பேசிக் கொண்ட
சங்கதி என்னவாக இருக்கும்?

*

நீ காதலிக்க
தொடங்கிய பின்
என் நிழலிலும்
வர்ணங்கள்!

*

ஒட்டி அமர்ந்தோம்
கட்டிக் கொண்டன
நிழல்கள்!

*

அடுத்த சந்திப்பிற்காக
காத்திருக்கிறோம்;
உனக்காக நானும்
நின் நிழலுக்காக
என் நிழலும்!

*

இவ்விடயத்தில்
உன்னைக்காட்டிலும்
உன் நிழல் மேல் ;
முத்தம் கேட்டால்
முகம் சுழிப்பதில்லை
என் நிழலிடம்!

உன் பேரழகை அழகாய் சொல்பவையே கவிதைகள்!
2:16 PM | Author: நிம்முவாகிய நான்

பிணைந்திருக்கும்
நம் கரங்களுக்குள்
கதகதப்பாய் காதல்!

*

உன் கன்னக்குழியில்
இருக்கிறது
என் ஆயுளின் சாவி!

*

வறண்ட உதட்டை
ஈரப்படுத்துகிறாய்!
அவசரமாய்
ஆயுத்தமாகின்றன
என் இதழ்கள் முத்ததிற்கு!

*

உன் வசவுகளை விட
துயரமானது
கோபமான மெளனம்!

*

நம் தனிமையில்
உன் துப்பட்டாவை
கலைக்கும் காற்றுக்கும்
எனக்கும் என்ன உறவென்றால்
என்ன நான் சொல்வது?!

*

காத்திருத்தல் சுகம்
உனக்காக
எனும்போது!

*

வாழ்க்கையை உருட்டுகையில்
எனக்கு விழுந்த
தாயம் நீ!

*

உன் பேரழகை
அழகாய் சொல்பவையே
கவிதைகள்!

உன்னால் பைத்தியமாகிவிட்டது உலகம்
2:15 PM | Author: நிம்முவாகிய நான்

நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!

*

உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!

*

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

*

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

*

உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!

நீ அழகுக்கான அளவுகோல்!
2:10 PM | Author: நிம்முவாகிய நான்
மேல் இதழ் முதல்வரி
கீழ் இதழ் மறுவரி
உன் இதழ்கள்
எனக்கான இருவரி கவி
*
நீ
அழகுக்கான
அளவுகோல்!
*
கவிதைகளில்
உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன்
உன்னழகை எழுதும் வேளைகளில்.
*
தூண்டிவிடுவது என்னவோ
உன்னழகு
பழி மட்டும் என் மேல்.
*
கைகட்டி அமர்ந்திருக்கிறாய்
நல்ல பிள்ளையாய்;
உன் அழகு போடுகிறது
குத்தாட்டம்!
*
நான் கொள்ளை அடிக்க அடிக்க
கொஞ்சமும் குறைவதில்லை
உன்னிடம் அழகு…
*
உன் அழகுக்கு அழகுகூட்ட
முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…