யாருமற்ற வீதிகளினூடே
நடந்து செல்கையில்
சிறிது தாகமெடுத்தது.
அரவமற்றுப் போன
வீதிகள் என்னைப் பார்த்து
கைகொட்டிச் சிரித்தன
நீர்வேண்டுமா தணிக்க?
வினவல் கேட்டு விழித்தேன்
ஆமென்ற தலையாட்டலில்
என் அகம் வீழ்ந்தது
அகந்தையை புதைக்க
நிலம் தோண்டு
தண்ணீர் கிடைக்கக்கூடும்
மண்டையில் மரமின்றி
நிலத்தில் மரமிடு
நீராறு நிலம் பிளக்கும்
செய்வாயா? தகம் தணிப்பேன்
கேட்டுவிட்டுக் கேவினேன்
தூரத்தில் ஆடுகள்
தரிசில்
மேய்ந்துகொண்டிருந்தன !
0 comments: