புணர்ச்சிவிகுதி
11:04 PM | Author: நிம்முவாகிய நான்




வெள்ளிக்கிழமை
மாலை 5 மணி
கூட்ஸ் வண்டிவரும்
தண்டவாளம் போல
மனது தடதடக்க
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அமைதியாய் இருக்கும் வீதியினை !
உன் வருகை எப்போதும் நிகழலாம் !

மழைவரும் முன்னே
வீசும்
ஈரக்காற்றினைப்போல்
உன் வரவை முரசுகொட்டி
அறிவிக்கின்றன உன்
கொலுசுகள் !
தாயின் குரல் கேட்ட
கன்றுபோல்
துள்ளித்தாவுகிறது
மனசு !


ஒருமுறை என்னை
நிமிர்ந்து பார்க்கிறாய்
அந்த ஒரு நொடியில்
பூப்படைகிறது
என் காதல்
உன் கண்களாலே !
உயிர்பெற்றேன்
மயங்கிக்கிடந்த நான் !
தாவி ஓடுகிறது மனது
உன் பின்னே ஒரு
நாய்க்குட்டியைப்போல் !


கோயிலுக்குச் செல்கிறாய்.
தாயின் கரம் பற்றிச்
செல்லும் குழந்தையைப்போல்
உன் கால்தடம் பற்றி
தொடர்கிறேன்
அசையும் அழகுகள்
அசைக்கின்றன
தணிக்கிறேன் பார்வையை !


மலர்கின்றன உன்வழித்தடம்
எங்கும் பூக்கள்
மாலைக் கதிர்கள்
முழுதுமாய் தின்கின்றன
உன் அழகை
மூச்சடைத்துக் கொண்டது
இருந்தும் வழிநடத்துகிறது
உன் வாசம் !


கோயிலினுள் தேடுகிறேன்
காணவில்லை
சிலைகளுக்குள் மறைந்துவிட்டாய் !
குழப்பத்துடன் பார்க்கையில்
கண்டுபிடித்தேன்
ஒருசிலை அசைகிறது !
பிரகாரத்தில் நிற்கிறாய்
அம்மனுக்கே வழிபாடு
செய்யும் அம்மனாய் !

சுற்றிவருகிறேன்
நம் கண்கள் புணர்ந்து
மகிழ்கின்றன
நிற்கிறாய் ஒரு
தனிமையான சிலைமுன்
ஆயத்தம் செய்கிறாய்
கண்களின் ஒளியை
விளக்கில் ஏற்ற !
காற்றில் காதல் வாசம் !

இன்றாவது பேசிவிடு !
மண்டியிட்டுக் கெஞ்சுகிறது
குழந்தைபோல் மனசு !
அதன் அடத்தையெல்லாம்
நிறைவேற்றிவிடுகிறோமா என்ன?
ஆசையாக இருந்தாலும்
ஏதோ தடுக்கிறது
சுற்றிவருகையில்
சுட்டு எரிக்கிறாய்
என்னையும் விளக்கையும் !



மற்றுமொரு வெள்ளி
பிரிதொரு மாலை
அமைதியாய் என்முன்
கிடக்கிறது அதே வீதி !
மாறாமல் நிற்கிறேன்
உன் வரவுக்காக
துடிக்கும் இதயத்துடன்
இன்றாவது பேசேன் !
மனது தனது
அடத்தை தொடங்கிவிட்டது !
|
This entry was posted on 11:04 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: